வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் தொடர்பாக நான்கு ஆடவர்கள், ஜூலை 11ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 33 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் மலேசியர்.
$400,000க்கும் அதிகமான வரியை அவர்கள் செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நான்கு பேரும் கல் சர்க்கிள் வட்டாரத்தில் பிடிபட்டனர்.
கல் சர்க்கிள் வட்டாரத்தில் லாரி ஒன்றுக்குப் பின்னால் இரண்டு வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கவனித்தனர்.
நான்கு ஆடவர்கள், லாரியிலிருந்து வேன்களுக்கு பெட்டிகளை இடமாற்றிக்கொண்டிருந்தனர்.
சோதனையிட்ட அதிகாரிகள், வேனுக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 480 அட்டைப்பெட்டிகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
லாரிக்குள், சாலையோரத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 3,488 அட்டைப்பெட்டிகள் இருந்தன.
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட மொத்தம் 3,968 அட்டைப்பெட்டிகளையும் லாரியையும் இரண்டு வேன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
வரி ஏய்ப்புக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, வரி செலுத்தப்படாத தொகையைவிட 40 மடங்கு அதிக அபராதம், ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்தக் குற்றத்துக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.

