சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் 40 கிலோ மீட்டர் நீளமுள்ள மிதிவண்டிப் பாதைகள் 2027ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட உள்ளன.
புதிய மிதிவண்டிப் பாதைகளைக் கட்ட நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமையன்று (ஜூலை 21) ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடுத்தது.
புதிய பாதைகளில் 36 கிலோ மீட்டருக்கும் அதிகமானவை புக்கிட் பாத்தோக், கிளமெண்டி, ஜூரோங் வெஸ்ட், குவீன்ஸ்டவுன் ஆகிய வட்டாரங்களில் கட்டப்படும்.
எஞ்சியுள்ள 4 கிலோ மீட்டர் நீளமுள்ள பாதை செம்பவாங், உட்லண்ட்ஸ், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் அமைந்திருக்கும்.
இப்பாதைகளில் மிதிவண்டிப் பாதைகளும் பகிர்ந்துகொள்ளப்படும் பாதைகளும் அடங்கும்.
பகிர்ந்துகொள்ளப்படும் பாதைகளைப் பாதசாரிகளும் தனியார் நடமாட்ட சாதனங்களைப் பயன்படுத்துவோரும் பயன்படுத்தலாம்.
ஏலக்குத்தகை மூலம் தேர்வு செய்யப்படும் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய பாதைகளைக் கட்டி முடித்துவிட வேண்டும்.
புதிய பாதைகளுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பாதைகளுக்கான கட்டுமானப் பணிகள் 2027ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக நிறைவடையும் என்று அது கூறியது.
ஜூரோங் வெஸ்ட், குவீன்ஸ்டவுன், புக்கிட் பாத்தோக், கிளமெண்டி ஆகிய வட்டாரங்களில் 34.4 கிலோ மீட்டர் நீளமுள்ள மிதிவண்டிப் பாதைகள் கட்டப்படும் என்று 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இப்பாதைகள் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் கட்டப்படும் சில மிதிவண்டிப் பாதைகள் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 3, 5, 6, புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 3, 6, அப்பர் புக்கிட் தீமா சாலை ஆகிய இடங்களில் கட்டப்படும்.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட்டில் உள்ள குடியிருப்புப் பேட்டைகளை புக்கிட் பாத்தோக் சென்ட்ரலில் உள்ள புக்கிட் பாத்தோக் எம்ஆர்டி நிலையத்துடன் புதிய பாதைகள் இணைக்கும்.