சிங்கப்பூர் உல்லாசக் கப்பல் மையத்தில் சிங்கப்பூர் சுங்கத்துறையும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் நடத்திய ஐந்து நாள் அதிரடிச் சோதனையில் வரி செலுத்துவதைத் தவிர்க்க விலை குறைத்து காட்டப்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
செப்டம்பர் 4ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் வரிசெலுத்தப்படாத சிகரெட்டுகளையும் பொருள் சேவை வரி செலுத்தப்படாத பொருள்களையும் அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
இந்தத் தகவலை சிங்கப்பூர் சுங்கத்துறை செப்டம்பர் 27ஆம் தேதியன்று வெளியிட்டது.
கூடுதல் வரி செலுத்துவதைத் தவிர்க்க மதிப்பைக் குறைத்துக் காட்டப்பட்ட பொருள்களில் ஆடவர் வைத்திருந்த ரத்தின மோதிரங்களும் பெண் ஒருவர் வைத்திருந்த தங்க நகையும் அடங்கும்.
வரி செலுத்துவதைத் தவிர்க்க பொருள்களின் விலையைக் குறைத்துக் காட்டிய குற்றத்துக்காக மொத்தம் 41 பயணிகள் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் ஐவர் பொருள், சேவை வரி தொடர்பாகவும் 36 பேர் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் தொடர்பாகவும் பிடிபட்டனர்.
மொத்தம் $12,105 அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
$743.35 பொருள், சேவை வரி, வரித்தொகை மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


