சமூக ஆர்வலர் ஜோலோவன் வாம்மீது திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 3) ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஜோலோவன் முறையான அனுமதி இல்லாமல் 5 முறை மெழுகுவர்த்தி ஏந்திய கூட்டங்களில் கலந்துகொண்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு மரணத் தண்டனையை எதிர்நோக்கும் சிறைக் கைதிகளுக்காக ஜோலோவன் அவ்வாறு செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அந்த நடவடிக்கைகளில் ஜோலோவன் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மூன்று கூட்டங்கள் சாங்கி சிறைச்சாலைக்கு அருகே நடத்தப்பட்டன. மேலும் மற்ற இரு கூட்டங்கள் சாங்கி பெண்கள் சிறைச்சாலைக்கு எதிரே உள்ள பேருந்து நிலையத்திலும், மரியம் வாக் அருகே உள்ள விளையாட்டு திடலிலும் நடந்தன.
45 வயது ஜோலோவன்மீது அனுமதியின்றி பொது இடங்களில் நடந்த கூட்டங்களில் கலந்துகொண்டதற்காக ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வழக்கை விசாரிக்க 8 வாரக்காலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் கூட்டங்களில் கலந்துகொண்டால் 3,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம். தொடர்ந்து அதே குற்றத்தை செய்தால் 5,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

