தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு புத்தாக்க முறையில் தீர்வுகாணும் நிறுவனங்களை புதிதாகத் தொடங்கியோருக்கு உதவ ஊக்குவிப்புத் திட்டம் ஒன்று அறிமுகம் காண்கிறது.
அந்தப் புதிய திட்டத்தின்கீழ் அத்தகையோர் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு $50 மில்லியன் வரையிலான நிதி உதவி பெற முடியும்.
அந்த ‘தேசிய பட்டதாரி ஆராய்ச்சி புத்தாக்கத் திட்டம்’ 2025 ஜனவரியில் தொடங்கும்.
உள்ளூரில் ஆராய்ச்சியில் ஈடுபடவும் புத்தாக்கத் தொழில்களைத் தொடங்கவும் ஆர்வத்துடன் இருப்போரை அத்திட்டம் ஆதரிக்கும்.
சிங்கப்பூரின் இரண்டு முன்னணி பல்கலைக்கழகங்களான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் (NUS) நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (NTU) தற்போது செயல்படுத்தி வரும் இரண்டு ஊக்குவிப்புத் திட்டங்களை புதிய திட்டம் ஒருங்கிணைக்கும்.
2028ஆம் ஆண்டு வரை 300 புதிய தொழில்முனைவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அந்தத் திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் சிங்கப்பூர் புத்தாக்க, தொழில்நுட்ப வார நிகழ்வில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் புதிய திட்டத்தை அறிவித்தார்.