மத்திய சேமநிதி (மசேநி) வீட்டு மானியம் ஓராண்டுக்கு முன்னர் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் பலர் மறுவிற்பனை வீடுகளை வாங்குவதற்கு அதனைப் பயன்படுத்தியதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு பிப்ரவரி 14 முதல் டிசம்பர் வரை, அந்த மானியத்தைப் பயன்படுத்தி 11,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மறுவிற்பனை வீடுகளை வாங்கின. 2022ஆம் ஆண்டு அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அது 31 விழுக்காடு அதிகம்.
மறுவிற்பனை வீடுகளை வாங்கிய 10,400 பேரிடம் $505.2 மில்லியன் மதிப்புள்ள அந்த மானியங்கள் கொடுக்கப்பட்டது என்றும், அடுத்த சில வாரங்களில் பரிவர்த்தனைகள் நிறைவுபெற்றதும் எஞ்சிய 600 பேர் மானியத்தைப் பெறுவார்கள் என்றும் வீவக கூறியது.
வீட்டு விலை மிக அதிகமாக இருப்பதாகக் கருதும் மறுவிற்பனை வீடுகளை வாங்க விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு ஆதரவளிக்க, மசேநி வீட்டு மானியம் அதிகரிக்கப்படும் என்று சென்ற ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டத்தின்போது துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்திருந்தார்.
முன்னதாக, ஈரறை முதல் நான்கறை வீடுகளை வாங்கியவர்களுக்கு $50,000 கிடைத்தது.
ஐந்தறை அல்லது அதைவிட பெரிய வீடுகளை வாங்கியோருக்கு $40,000 கிடைத்தது.
முதல்முறை வீடு வாங்கும் ஒற்றையர் $25,000உம், ஐந்தறை வீடுகளை வாங்கிய ஒற்றையர் $20,000உம் பெற்றனர்.
அதிகரிப்புக்குப் பின்னர், இப்போது ஈரறை முதல் நான்கறை வீடுகளை முதல்முறை வாங்குவோருக்கு $80,000 கிடைக்கிறது.
ஐந்தறை அல்லது அதைவிட பெரிய வீடுகளை வாங்குவோருக்கு $50,000 கிடைக்கிறது.
நான்கறை அல்லது அதற்கும் சிறிய வீடுகளை வாங்கும் முதல்முறை ஒற்றையர் இப்போது $40,000 பெறுகிறார்கள். ஐந்தறை வீடுகளுக்கு அவர்கள் $25,000 பெறுகிறார்கள்.
அதிகரிக்கப்பட்ட மானியத்தால், சென்ற ஆண்டு தங்களின் மறுவிற்பனை வீடுகளுக்கான சாவிகளை பெற்ற முதல் முறை வீடு வாங்கும் குடும்பங்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு, வீவக கடன்களைச் செலுத்த தங்களின் மாதாந்திரக் குடும்ப வருமானத்தில் 25 விழுக்காடு அல்லது அதற்கும் குறைவாகப் பயன்படுத்தியதாக வீவக கூறியது.
அதிகரிக்கப்பட்ட மானியத்தைப் பெற்ற 11,000 குடும்பங்களில் 69 விழுக்காட்டினர் குடும்பத்தார் என்றும், 31 விழுக்காட்டினர் ஒற்றையர் என்றும் தெரிக்கப்பட்டது.