சிலேத்தார் விரைவுச்சாலையில் கடந்த வாரம் நிகழ்ந்த விபத்து ஒன்றில் 58 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
இது பற்றி காவல்துறையினர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) தகவல் வெளியிட்டனர்.
ஒரு கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட அந்த விபத்திற்குப் பிறகு, அந்த ஆடவர் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
24 முதல் 31 வயதுக்குட்பட்ட மேலும் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் ஒரு பின்னிருக்கைப் பயணியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும் அவர்கள் அப்போது சுயநினைவுடன் இருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) உட்லண்ட்ஸ் அவென்யூ 12 வெளிவழிக்கு அருகே மத்திய விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் நிகழ்ந்த அந்த விபத்து குறித்து அன்றைய தினம் காலை 7.50 மணியளவில் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த விபத்து பற்றி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்று சாலைத் தடங்களின் நடுவே இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விழுந்து கிடப்பதையும் அவர்களைச் சுற்றி நால்வர் நிற்பதையும் அச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில் காணமுடிந்தது.
மற்றொருவர் போக்குவரத்தைச் சீரமைக்க உதவுவதும் அதில் காணப்பட்டது.
பத்தாண்டுகளுக்கு முன்னர் 2016ஆம் ஆண்டு 141ஆகப் பதிவான சாலைப் போக்குவரத்து மரண எண்ணிக்கை கடந்த ஆண்டு 149ஆக அதிகரித்து பத்தாண்டு காணாத உச்சத்தைத் தொட்டது.


