குழந்தைகளைப் பாலியலில் ஈடுபடுத்திய வெவ்வேறு சம்பவங்களின் தொடர்பில் ஆறு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட உள்ளது.
வயது குறைந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றமும் குழந்தைகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய காணொளிகளை வைத்திருந்த குற்றமும் அவர்கள் மீது சுமத்தப்படலாம்.
22 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பேரும் குற்றப் புலன்விசாரணைத் துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை வியாழக்கிழமை (மே 22) தெரிவித்தது.
கைதான அனைவர் மீதும் வெள்ளிக்கிழமை (மே 23) குற்றம் சுமத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களில் ஒருவரான 37 வயது ஆடவர் இளம்பெண் ஒருவருடன் இணையத்தில் தொடர்புகொண்டு நட்பாகப் பழகிய பின்னர் அவருடன் பாலியல் தொடர்புகொண்டதாக நம்பப்படுகிறது.
தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் செய்கைகளிலும் அவரை ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
மார்ச் 25ஆம் தேதி கைதான அவர் மீது 18 வயதுக்குக் குறைந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம் சுமத்தப்படும். மேலும், பாலியல் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணைத் தொடர்புகொண்ட ஒரு குற்றமும் அவர் மீது சுமத்தப்பட உள்ளது.