சிங்கப்பூரில் $6 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய மோசடிச் சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகத்தில் 231 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மோசடிச் சம்பவங்களில் ஈடுபடுவோரைத் தேடும் நடவடிக்கை ஜனவரி 30 முதல் பிப்ரவரி 12 வரை இருவாரங்களுக்கு நடைபெற்றது. வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் ஏழு காவல்நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து அந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பிடிபட்டவர்கள் சிங்கப்பூரில் 900க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுவதாக காவல்துறை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இணையத்தில் பொருள் வாங்கியோரிடமும் முதலீட்டு ஆசை காட்டியும் வேலை வாங்கித் தருவதாகவும் நடைபெற்ற மோசடிச் சம்பவங்கள் அவை.
அதிகாரிகளிடம் சிக்கிய 231 பேரும் 14 வயதுக்கும் 84 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் 66 பேர் பெண்கள்.
மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றது, சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சேவை வழங்கியது போன்ற குற்றங்களில் அவர்களுக்கு இருந்த தொடர்பு பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
மோசடி மற்றும் அது சார்ந்த குற்றங்களுக்கு பிரம்படி தண்டனை கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
மோசடிக் கும்பல்களின் உறுப்பினர்களுக்கு ஆறு முதல் 24 பிரம்படிகள் வரை கட்டாய தண்டனையாக விதிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த அக்டோபர் மாதம் நடந்த நாடாளுமன்ற விவாதத்தில், பிரம்படிகள், மோசடிக் குற்றங்களுக்கு தகுந்த தண்டனையாக அமையும் என்று உள்துறை அமைச்சு பரிந்துரை செய்திருந்தது.
அதுபோன்ற குற்றங்களைத் தடுக்க பிரம்படிகள் உதவும் எனவும் அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

