தீவு விரைவுச்சாலையில் ஜனவரி 11ஆம் தேதியன்று ஒன்பது வாகனங்கள் விபத்துக்குள்ளாயின.
விபத்தில் சிக்கிய நான்கு மோட்டார்சைக்கிளோட்டிகள், அவர்களுடன் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த இருவர் என அறுவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அவர்களில் 70 வயது ஆடவரும் அடங்குவார்.
சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் தாம்சன் ரோடு அருகில் நான்கு கார்களும் ஐந்து மோட்டார்சைக்கிள்களும் சம்பந்தப்பட்ட விபத்து ஒன்று நிகழ்ந்தது குறித்து காலை 6.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேநாளில் சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் சிம்ஸ் அவென்யூ அருகில் காலை சுமார் 8 மணியளவில் கனரக வாகனம் ஒன்றுடன் டாக்சி மோதியதை அடுத்து 37 வயது மாது ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
டாக்சி குப்புறக் கிடக்கும் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இரு விபத்துகள் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.