சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விதிகளை மீறிய 67 தனிநபர் நடமாட்டச் சாதனங்களும் மின்சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
பாசிர் ரிஸ், பொங்கோல், செங்காங், செம்பவாங் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
150 நடமாட்டச் சாதனங்கள் தொடர்பிலான குற்றங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து விதிகளை மீறிய தனிநபர் நடமாட்டச் சாதனங்களும் மின்சைக்கிள்களும் பிடிபட்டன.
நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் பிடித்த மின்சைக்கிள்களிலும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களிலும் உணவுப் பைகள் இருந்தன.
அவற்றுள் சில நடமாட்டச் சாதனங்களில் பதிவு எண் பலகைகள் இல்லை.
கடந்த ஆண்டு முழுவதும் விதிகளை மீறிய ஏறத்தாழ 900 நடமாட்டச் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஆணையம் சொன்னது.
பதிவு எண் பலகைகள் இல்லாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்தியதற்காக முதல்முறை பிடிபடுவோருக்கு $1,000 வரை அபராதம் அல்லது மூவாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

