போக்குவரத்து விதிமீறல்களை அடையாளம் காண புதிய கண்காணிப்பு அமலாக்கக் கேமராக்களைச் (TVEC) சோதனை முறையில் போக்குவரத்து காவல்துறை கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொருத்தியது.
இதன்மூலம் 67,000க்கும் அதிகமான போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதிய கேமராக்களின் பலன் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் சண்முகம் எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.
67,000க்கும் அதிகமான போக்குவரத்து விதிமீறல்கள் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.
சாலையில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது வாகனத்தைச் செலுத்துவது, சட்டவிரோதமாக ‘யு-டர்ன்’ செய்வது உள்ளிட்ட குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தற்போது ஒன்பது போக்குவரத்து கண்காணிப்பு அமலாக்க கேமராக்கள் சிங்கப்பூர் சாலைகளில் உள்ளன. அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

