தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோமீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி டிக்டாக் சமூக ஊடகத்தில் காணொளி வெளியிட்ட ஆடவருக்கு 6,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மன்மீத் சிங் பஹதார் சிங் என்னும் 57 வயது ஆடவர் அமைச்சர் ஜோசஃபின் டியோ மலாய் சமூகத்தினரை சீன மொழியில் இழிவாகப் பேசியாதாகக் கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி டிக்காக்கில் அக்காணொளியை அவர் பதிவிட்டார்.
சிங் தமக்கு ‘வாட்ஸ்ஆப்’ல் வந்த ஒரு தகவலைச் சரிபார்க்காமல் உடனடியாகக் காணொளி ஒன்றைப் பதிவிட்டார்.
காணொளி பதிவிட்ட நான்கு மணி நேரத்தில் சிங்மீது அமைச்சர் ஜோசஃபின் டியோ காவல்துறையில் புகார் கொடுத்தார்.
தவறான தகவலைப் பதிவிட்டதை உணர்ந்த சிங், அன்றே அக்காணொளியை டிக்டாக்கிலிருந்து நீக்கினார். அதன் பின்னர் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு ஒரு காணொளி வெளியிட்டார்.
சிங் வேண்டுமென்றே வெவ்வேறு இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை எழுப்பிவிடும்விதமாக நடந்துகொண்டதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சிங் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

