தான் பயணம் செய்துகொண்டிருந்த விமானத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரும் இருப்பதை உணராத வர்த்தகரும் சீன நாட்டவருமான 45 வயது யி ஹுவேய்சுன், இன்னொரு பயணியின் பையை எடுத்தார்.
பையை எடுத்தது தொடர்பில் கம்போடிய ஏர்வேஸ் விமானத்தில் இருந்த உதவிக் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) லீ ஜுன் லோங், யியை விசாரித்தபோது அந்தப் பை தன்னுடையது என்று யி பதிலளித்தார்.
அதன் பின்னர், ஏஎஸ்பி லீ பையை உயரத் தூக்கிக் காட்டியவாறு அது யாருக்குச் சொந்தம் என்று கேட்டார்.
பையின் உரிமையாளர் உடனே எழுந்து அந்தப் பை தன்னுடையது என்று கூறினார்.
அதையடுத்து, சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் யி கைது செய்யப்பட்டார்.
திருடிய குற்றச்சாட்டை ஜனவரி 30ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டதை அடுத்து, யிக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
விமானப் பயணத்தின்போது நடந்த திருட்டு குறித்து இவ்வாண்டு தொடங்கி ஜனவரியில் செய்தி வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது சம்பவம் இது.