கடைகளில் திருடியதாக ஏழு பேர் மீது புதன்கிழமையன்று (ஜனவரி 15) குற்றம் சுமத்தப்பட்டது.
பற்களைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் நூல், எபலோன், பால் மாவு, நகைகள், விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றை அவர்கள் திருடியதாகக் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்களில் ஒருவருக்கு 18 வயது.
அவர் பிப்ரவரி 4ஆம் தேதியன்று குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு மாதங்களில் இரண்டு ஷெங் ஷியோங் பேரங்காடிகளில் அவர் குறைந்தது 55 முறை திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் மீது இரண்டு திருட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவர் 17 வயதாக இருந்தபோது இக்குற்றங்களைப் புரிந்ததால் அவரது பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
18 வயதுக்குக் குறைவானவர்கள் சிறார், இளையர் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
63 வயது ஜொஹாரி அகமது மீது மூன்று திருட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
60 வயது போ லாய் செங் மீதும் மூன்று திருட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பல்வேறு பேரங்காடிகளில் பால் மாவு, குழந்தை அணையாடை ஆகியவற்றை திருடியதாக 34 வயது முகம்மது ஹெல்மி கமிட் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பிளாசா சிங்கப்பூரா கடைத்தொகுதியில் பல விளையாட்டுப் பொருள்களைத் திருடியதாக 22 வயது சோ யுசெங் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கிரேட் வோர்ல்டு சிட்டி கடைத்தொகுதியில் பொருள்களைத் திருடியதாக 28 வயது லீ யுவான் யுங் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அயோன் ஆர்ச்சர்ட்டில் நகைகளைத் திருடியதாக 32 வயது ஜின் சியாவெய் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடைகளில் திருடிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.