துவாசில் இருக்கும் தொழிற்சாலைக் கட்டடம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்திலிருந்து எழுவர் எந்தவொரு காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
எண் 46 டெக் பார்க் கிரசென்ட்டில் நிகழ்ந்த இந்தத் தீச்சம்பவம் குறித்து காலை 7.15 மணிக்குத் தனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர 80 தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர் என்றும் 15 அவசர சேவை வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன என்றும் ஃபேஸ்புக் பதிவில் அது குறிப்பிட்டது.
நான்கு குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அருகில் இருக்கும் கட்டடங்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
உலோக வேலைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள், பொருள்கள் போன்றவை வைக்கப்பட்டிருந்த இடமும் அலுவலகப் பொருள்களும் தீக்கிரையாகின என அது தெரிவித்தது.
மேலும், இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என அது கூறியது.
செவ்வாய்க்கிழமை காலை 8.40 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.