மிக குட்டையான கால்களும் நீண்ட உடலுமுள்ள ‘டாக்ஸ்ஹுந்ட்’ வகை நாய்களை விற்பனை செய்வதாக இணையத்தில் விளம்பரம் ஒன்றை இருவர் பதிவிட்டனர். மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக அவற்றைச் சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யவிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
அங்கீகரிக்கப்படாத வழியில் செல்லப்பிராணிகளை அவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்பதை அறிந்தும் அவற்றை வாங்க மாது ஒருவர் முன்வந்தார்.
28 வயதான சூன் பூன் கோங், ரெய்னா வோங் சி குய் இருவர்களிடமிருந்து 2,300 வெள்ளிக்கு ‘டாக்ஸ்ஹுந்ட்’ வகை நாய் ஒன்றை வாங்கியதாக 41 வயது டோக் சு வென் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட வழியில் இந்த வகை நாய்கள் $5,000 தொடங்கி $9,000 வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக ‘டாக்ஸ்ஹுந்ட்’ வகை நாய் ஒன்றை இறக்குமதி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட டோக் சு வென்னுக்கு $7,000 அபராதம் புதன்கிழமையன்று (டிசம்பர் 4) விதிக்கப்பட்டது.
செல்லப் பிராணிகள் கடத்தலை ஊக்குவிக்கும் வகையில் அவற்றைக் கள்ளத்தனமாக வாங்க விரும்பும் நபர்களுக்கு எதிராக தேசிய பூங்காக் கழகம் வழக்கு தொடர்ந்திருப்பது இதுவே முதல்முறை.
நீதிமன்ற ஆவணங்களின்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுட்டிருந்தனர். அப்போது, சூன் ஓட்டிவந்த காரை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில், ‘பொமரேனியன்’, ‘டாக்ஸ்ஹுந்ட்’ வகை நாய் இரண்டினைக் கண்டனர். அந்தக் காரின் பயணிகள் இருக்கையில் வோங் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.