சுவா சூ காங் ஸ்திரீட் 3ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 570ல் உள்ள வீட்டில் ஆடவர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 3) மாண்டுகிடந்தார்.
பல நாள்களாக விட்டுக்கு வெளியே உணவுக் கலன்கள் எடுக்கப்படாமல் இருந்ததைக் கவனித்த அண்டை வீட்டார் இதுகுறித்து காவல்துறையிடம் தெரியப்படுத்தியதாக ஷின் மின் ஊடகம் செய்தி வெளியிட்டது. அவற்றிலிருருந்து துர்நாற்றம் விசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தைக் காவல்துறை சென்றடைந்த பிறகும் ஷின் மின் செய்தியாளர்களால் அந்த துர்நாற்றத்தை உணர முடிந்தது. இயற்கைக்கு மாறான முறையில் ஒருவர் மாண்டதாக வியாழக்கிழமை பிற்பகல் 1.10 மணிக்குத் தங்களுக்குத் தகவல் வந்ததாக மதர்ஷிப் ஊடகத்தின் கேள்விகளுக்குக் காவல்துறை பதிலளித்தது.
சம்பந்தப்பட்ட ஆடவர் வீட்டில் நினைவிழந்த நிலையில் காணப்பட்டார். அவர் உயிரிழந்தது சம்பவ இடத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின்படி, ஆடவரின் மரணத்தில் சூது இருப்பதாகக் காவல்துறை சந்தேகப்படவில்லை. காவல்துறை விசாரணை தொடர்கிறது.
மாண்ட ஆடவர் தனியாக வசித்துவந்ததாகவும் அதிக உடல் எடை காரணமாக அவர் வீட்டைவிட்டு அவ்வளவாக வெளியே சென்றதில்லை என்றும் அண்டைவீட்டார் ஒருவரின் இல்லப் பணிப்பெண் தெரிவித்தார்.


