ஏறத்தாழ 51 மில்லியன் அமெரிக்க டாலர் (அக்காலத்தில் ஏறத்தாழ S$72 மில்லியன்) கையாடல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பெருஞ்செல்வந்தர் மீது, ஊழல் மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்காக மேலும் 38 குற்றச்சாட்டுகள் புதன்கிழமையன்று (மே 20) சுமத்தப்பட்டுள்ளன.
59 வயது திரு இங் டெக் லீ, அவரது மனைவி 57 வயது திருவாட்டி தோர் சுவி ஹுவா ஆகியோர் மலேசியாவில் கடந்த 2024 டிசம்பரில் பிடிபட்டனர். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில், கணினிச் சில் தயாரிப்பு நிறுவனங்களுக்கான மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ‘சிடிராயா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு இங் பொறுப்பு வகித்தார்.
அவர் ஏப்ரல் 2003ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலங்களில், அழிக்கப்படாத கணினிச் சில்களை முறைகேடாகப் பயன்படுத்தி விற்பனை செய்ததன் மூலம் 51 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவும் காவல்துறையும் புதன்கிழமை (மே 20) வெளியிட்ட கூட்டறிக்கையில், தற்போது சிடிராயா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இல்லாத திரு இங் மீது லஞ்சம், நம்பிக்கை மோசடி , திருட்டு, ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, கணக்கு விவரங்களைப் போலி செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவர் மீது நம்பிக்கை மோசடி மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் எதிர்கொள்ளும் மொத்தக் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

