சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டுவரை சராசரியாக 72,300 பராமரிப்பாளர்கள் இல்லப் பராமரிப்புக்கான மானியத்தைப் பெற்றதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்துள்ளது.
அத்தகையோர் நிரந்தரமாக நடமாட முடியாத உடற்குறையால் பாதிக்கப்பட்ட அன்புக்குரியோரைப் பார்த்துக்கொள்கின்றனர்.
இல்லப் பராமரிப்புக்கான மானியத்தின்கீழ் நிரந்தரமாக நடமாட இயலாத உடற்குறையுள்ளோருக்கு ஒவ்வொரு மாதமும் $600 வரையிலான ரொக்கம் வழங்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க அந்தத் தொகை வழங்கப்படுவதாக அமைச்சு சொன்னது.
செம்பவாங் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாஃபர், பராமரிப்பாளர் ஆதரவுத் திட்டங்கள் மூலம் எத்தனை பேர் பயனடைந்தனர் என்பதுகுறித்து கேள்வி கேட்டார்.
அதற்குப் பதிலளித்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, 17,700 பேர் இடைக்காலப் பராமரிப்புச் சேவைகளை வீடுகளிலும் சமூக அளவிலும் பெற்றுள்ளதைப் பகிர்ந்துகொண்டது.
கிட்டத்தட்ட 3,200 பராமரிப்பாளர்கள், பராமரிப்பாளர் பயிற்சி மானியங்களைப் பெற்றனர்.

