திருமணமாகாத சிங்கப்பூர்ப் பெண்கள்மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 745 குழந்தைகள் பிறந்தன.
2020க்கும் 2024ஆம் ஆண்டு இடைப்பட்ட காலகட்டத்தில் பதிவான தரவு இது.
இந்தத் தகவலைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஜூல்கிஃபிலி புதன்கிழமை (அக்டோபர் 15) நாடாளுமன்றத்தில் எழுத்துவழி பதில்மூலம் வெளியிட்டார்.
அந்த ஐந்தாண்டுக் காலகட்டத்தில், அக்குழந்தைகளில் 12 பேரை அவர்களின் பெற்றோர் தத்தெடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முறைமணப் பிறப்புச் சட்டம் 1934ன்படி, சிங்கப்பூரில் திருமணமாகாத தம்பதியர்க்குப் பிறக்கும் குழந்தை, முறைதவறிப் பிறந்த குழந்தையாகப் பார்க்கப்படும். தம்பதியர் திருமணம் செய்துகொண்டாலோ அல்லது பிள்ளை தத்தெடுக்கப்பட்டாலோ அந்த நிலை மாற்றப்படும்.
“இருப்பினும், சிங்கப்பூர் அரசாங்கம் குழந்தைகளைப் பிரித்துப் பார்க்காது. குழந்தையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் வழங்கப்படும் அனுகூலங்கள் அவர்களின் பெற்றோரின் நிலையை வைத்துக் கணக்கிடப்படாது,” என்று அமைச்சர் மசகோஸ் விளக்கினார்.
கல்வி, சுகாதாரம், பராமரிப்பு உள்ளிட்ட நன்மைகள் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
“அனைவரையும் உள்டக்கிய சமூகமாகச் சிங்கப்பூர் திகழும். திருமணமாகாத பெண்கள்மூலம் பிறக்கும் குழந்தைகளுக்குத் தேவையான ஆதரவு வழங்கப்படும்,” என்றும் அமைச்சர் மசகோஸ் உறுதியளித்தார்.