வெளிநாட்டு ஊழியர்கள் சென்ற லாரி மீது மெர்சிடிஸ் கார் மோதி நிகழ்ந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். யீஷுன் அவென்யூ 6, 7 சந்திப்பில் நேற்றுக் காலை நிகழ்ந்த இவ்விபத்து குறித்து காலை 7.51 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. காயமடைந்த அனைவரும் சுய நினைவுடன் கூ தெக் புவாட் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் காரை ஓட்டிச் சென்ற பெண்மணியும் லாரி ஓட்டுநரும் அடங்குவர். மற்ற ஒன்பது பேரும் வெளிநாட்டு ஊழியர்கள். அவர்கள் அனைவரும் சிறிய அளவில் காய மடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் மின்தூக்கிப் பராமரிப்பு நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் என்றும் அவர்கள் உட்லண்ட்சில் உள்ள தங்குவிடுதியில் இருந்து வேலைக்காக யீஷுன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்த தாகவும் 'ஷின்மின்' செய்தி கூறியது. வாகனங்கள் மோதிக்கொண்டதில் தமது இடது கையில் காயமடைந்ததாக பெயர் கூற விரும்பாத வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சொன்னதாக அச்செய்தி குறிப்பிட்டது.
விபத்து நிகழ்ந்ததும் அதிர்ச்சியில் லாரியைவிட்டு இறங்கிய வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது முகத்தில், மார்பில், கையில் காயமடைந்ததாகக் கூறினர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஆடவர் ஒருவர் தெரிவித்தார். படம்: ஷின்மின்

