செங்காங்கில் 79 வயது மாது ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 44 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 1ஆம் தேதி முற்பகல் 11.48 மணிக்கு ஃபெர்ன்வேல் ரோட்டில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறை திங்கட்கிழமை (ஜூன் 2) தெரிவித்தது.
வீட்டில் அந்த மாது அசைவின்றிக் கிடந்ததை அதிகாரிகள் கண்டனர். அவர் இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.
அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே கைதுசெய்யப்பட்டார். இருவரும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆடவர்மீது செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இச்சம்பவம் குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.

