ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) காலை நான்கு வாகனங்கள் விபத்தில் சிக்கின.
இந்த விபத்தில் காயமடைந்த எட்டுப் பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அங் மோ கியோ அவென்யூ 1க்கு இட்டுச்செல்லும் வெளிச்சாலைக்கு முன்னதாக இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் பேருந்து, லாரி, டாக்சி, கார் ஆகிய வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருந்தன.
மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டுசெல்லப்பட்ட எட்டுப் பேர், 22 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள். விபத்து பற்றி விசாரணை தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமுற்றவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் என உள்ளூர் செய்தித்தளமான '8world' குறிப்பிட்டது. விபத்துக்குள்ளான லாரியில் அவர்கள் பயணம் செய்ததாகத் தெரிகிறது.

