தென்மேற்கு மாவட்டத்தில் வசிக்கும் குறைந்த வருமானமுடைய நீரிழிவு நோயாளிகள் 800 பேருக்கு ரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவி வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி ஆறு மாதங்களுக்கு ரத்த சர்க்கரை அளவை அவர்கள் பரிசோதிக்கலாம்.
அறக்கொடை அமைப்பு 'டயபிட்டிஸ் சிங்கப்பூர்', மருந்துத் தயாரிப்பு நிறுவனம் 'ரோஷே டயபிட்டிஸ் கேர்' வியாழக்கிழமை (டிசம்பர் 15) தொடங்கிய சமூகத் திட்டத்தின்கீழ் இந்த விநியோகம் இடம்பெறுகிறது.
சமூகத்தில் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடியோர், உகந்த ரத்த சர்க்கரை அளவைக் கட்டிக்காக்க இந்தத் திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
ஒவ்வொரு பரிசோதனைக் கருவியிலும் ரத்த சர்க்கரை கண்காணிப்புக் கருவி, 'டெஸ்ட் ஸ்ட்ரிப்', 'லான்செட்', எச்பிஏ1சி பரிசோதனைக் கருவி ஆகியவை உள்ளடங்கும்.
அத்தியாவசிய அன்றாடப் பொருள்களுக்கு அப்பாற்பட்டு சுகாதாரப் பொருள்களையும் மருந்துகளையும் வாங்குவது பற்றி குறைந்த வருமானம் உடையோர் கவலைப்பட வேண்டாம் என்பதற்காகவே அவர்களை இலக்காகக் கருதி பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படுவதாக 'டயபிட்டிஸ் சிங்கப்பூர்' நிர்வாக இயக்குநர் சத்யபிரகாஷ் திவாரி குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் பலனடையக்கூடியவர்களை அடையாளம் காண, சமூக ஆதரவுக் குழுக்கள், சமூக அமைப்புகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து 'டயபிட்டிஸ் சிங்கப்பூர்' பணியாற்றும்.


