சிங்கப்பூரில் ஆட்குறைப்புக் குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் தெரிவிக்கும் முதலாளிகள் அடுத்த ஐந்து நாள்களுக்குள் மனிதவள அமைச்சிடம் கட்டாய ஆட்குறைப்பு அறிவிப்பைச் சமர்ப்பிக்கவேண்டும்.
பத்து அல்லது அதற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு அது பொருந்தும் என்று மனிதவள அமைச்சு வலியுறுத்தியது.
அவ்வாறு அறிவிக்கத் தவறும் நிறுவனங்களுக்கு முதல்முறையாக $1,000 அபராதமும் அடுத்தடுத்த தருணங்களில் $2,000 அபராதமும் விதிக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
கட்டாய ஆட்குறைப்பு அறிவிப்பை மனிதவள அமைச்சிடம் சமர்ப்பிக்கத் தவறும் நிறுவனங்கள்மீதான அபராதங்கள் உயர்த்தப்படுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு பேட்ரிக் டேய் டெக் குவான் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மனிதவள அமைச்சு, பெரும்பாலான முதலாளிகள் கட்டாய ஆட்குறைப்பு அறிவிப்பைச் சமர்ப்பித்துவிடுகின்றனர் என்றது.
கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட 81 விழுக்காட்டு கட்டாய ஆட்குறைப்பு அறிவிப்புகள், ஐந்து நாள்களுக்குள்ளாகவே அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அதற்கு முந்தைய ஆண்டு அந்த எண்ணிக்கை 61 விழுக்காடாக இருந்தது என்ற அமைச்சு, நிறுவனங்களிடம் நல்ல முன்னேற்றத்தைக் காண முடிவதாகக் குறிப்பிட்டது.
தாமதமாக அறிவிப்புகளைச் சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டன என்ற அமைச்சு, பெரும்பாலான நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்ததாகவும் தவற்றைத் திருத்திக்கொள்வதாகவும் கூறியதாகக் குறிப்பிட்டது.


