சக பெண் ஊழியர்களுக்கும் பொது இடங்களில் பெண்களுக்கும் தெரியாமல், அவர்களைத் தகாத முறையில் காணொளி எடுத்த 28 வயது ஆடவருக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) 81 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2025 மே 3ஆம் தேதி, தகஷிமாயா கடைத்தொகுதியில் பெண் ஒருவரின் ஆடைக்கு அடியில் தன் கைப்பேசியில் அந்த ஆடவர் காணொளி எடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் பாதுகாவலர்களுக்குத் தெரியப்படுத்தி, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், ஈராண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் 142க்கும் மேற்பட்ட காணொளிகளை எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
அலுவலக உணவுக்கூடத்திலும் இணைப்புப் பேருந்துக்காக வரிசையில் நின்றபோதும் மின்படிக்கட்டுகளில் சென்றபோதும் சக பெண் ஊழியர்களான ஒன்பது பேரை 85 முறை அந்த ஆடவர் தகாத முறையில் காணொளி எடுத்தார்.
கோல்ட் ஸ்டோரேஜ் பேரங்காடியில் இரு சகோதரிகளை அவர்களின் தாயார் முன்னிலையிலும் அந்த ஆடவர் ரகசியமாகக் காணொளி எடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
2025ல் பிணையில் வெளிவந்தபோதும் அவர் தொடர்ந்து இக்குற்றத்தில் ஈடுபட்டார். நீதிமன்ற உத்தரவு காரணமாகக் குற்றவாளி, பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.


