பீஷான் ஸ்திரீட் 13ல் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) நடந்த சாலை விபத்தில் காயமுற்று சுயநினைவிழந்த 86 வயது ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் காலை 9.50 மணிக்கு விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) கூட்டாகத் தெரிவித்தன.
சம்பவத்தை நேரடியாகப் பார்த்த திரு ஹுவாங் என்பவர், காயமடைந்த முதியவருக்கு குடிமைத் தற்காப்புப் படையினரால் அவசர சுவாச சிகிச்சை (சிபிஆர்) வழங்கப்பட்டதாகக் கூறினார்.
பல காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் இருந்ததையும் ஒரு நீல நிற மின்வாகனம் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருக்க ஆடவர் ஒருவர் அவர்களால் விசாரிக்கப்பட்டதையும் நேரில் கண்டதாக திரு செங் என்ற மற்றொருவர் தெரிவித்தார்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

