2025ல் புனித ஹஜ் யாத்திரை செல்ல ஏறத்தாழ 900 யாத்திரிகர்கள் நவம்பர் 5 முதல் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்திடமிருந்து (முயிஸ்) கடிதங்களைப் பெறுவர்.
தேர்வு செய்யப்பட்டோருக்கு இதுகுறித்து குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வழியாக தெரியப்படுத்தப்படும் என்று முயிஸ் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்திரிகர்கள், தாங்கள் மருத்துவ ரீதியாக தகுதியாக உள்ளோமா என்பதை மருத்துவ நிபுணர்களிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்று முயிஸ் அறிவுறுத்தியது.
தகவல் கிடைத்தவுடன், யாத்திரிகர்கள் MyHajSG இணையத்தளத்துக்குச் சென்று கடிதத்தைப் படிக்கலாம். தங்கள் இடத்தை உறுதிசெய்துகொள்ள, அனுமதி பெற்ற பயண முகவையிடமிருந்து ஹஜ் தொகுப்புத் திட்டத்தை வாங்க வேண்டும். அத்துடன், அந்த இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இதர தகுதிக்கூறுகளை நவம்பர் 17க்குள் அவர்கள் பூர்த்திசெய்ய வேண்டும்.
முயிஸ், 11 பயண முகவைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவை மொத்தம் 28 ஹஜ் தொகுப்புத் திட்டங்களை வழங்குகின்றன.

