வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிக்கும் சுமார் 950,000 சிங்கப்பூர்க் குடும்பங்கள் ஜூலை மாதம் பொருள், சேவை வரி யு-சேவ் பற்றுச்சீட்டு, சேவை பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளைப் பெறுவார்கள் என்று நிதி அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
2023 நிதி ஆண்டில் தகுதிபெறும் குடும்பங்கள் வழக்கமான யு-சேவ் தள்ளுபடியைவிட இருமடங்கு அதிகமாகப் பெறுவார்கள்.
ஓரறை அல்லது ஈரறை வீவக வீடுகளில் வசிக்கும் சராசரி குடும்பத்தின் எட்டு முதல் பத்து மாதப் பயனீட்டுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு இது போதுமானது. மூன்று, நான்கு அறை வீடுகளில் வசிக்கும் சராசரி குடும்பம் நான்கு முதல் ஆறு மாதப் பயனீட்டுக் கட்டணம் செலுத்த இந்தத் தள்ளுபடி போதுமானதாக இருக்கும்.
தகுதிபெறும் குடும்பங்கள் தத்தம் நகர மன்றங்களுக்குச் செலுத்தும் சேவை, பராமரிப்புக் கட்டணத்திற்குக் காலாண்டுதோறும் பெறும் அரை மாதம் முதல் ஒரு மாதம் வரையிலான தள்ளுபடியையும் ஜூலையில் பெறுவார்கள்.
இந்த நிதி ஆண்டில், மொத்தம் சுமார் $720 மில்லியன் யு-சேவ், சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
இந்தத் தள்ளுபடிகள், நகர மன்றங்கள் நிர்வகிக்கும் சேவை, பராமரிப்புக் கணக்குகளில் நேரடியாகச் சேர்க்கப்படும் என்பதால் குடும்பங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
தங்களுக்குத் தள்ளுபடிகள் கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள, சிங்பாஸ் பயன்படுத்தி வீவக இன்ஃபோவெப் தளத்தில் My HDBPage பக்கத்தை அணுகலாம்.
அரசாங்கம் பொருள், சேவை வரி பற்றுச்சீட்டுத் திட்டத்தை 2012ல் தொடங்கியது.
சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடி 2022 நிதி ஆண்டிலிருந்து இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.