ஆட்கடத்தல், ஆயுதம் வைத்திருத்தல்; நால்வர் கைது

ஆட்கடத்தல், ஆயுதம் வைத்திருத்தல்; நால்வர் கைது

2 mins read
8cee6c58-fd31-4ad8-9fe2-c27af2ee47ab
‘பாராங்’ எனப்படும் தடை செய்யப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

ஆட்கடத்தலில் ஈடுபட்டது, தடை செய்யப்பட்ட ஆயதத்தை வைத்திருந்தது ஆகிய குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்கள்.

கேன்பெரா ஸ்திரீட்டில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) நால்வர், ஆடவர் ஒருவரை பாராங் கத்தியால் மிரட்டியதாகக் காவல்துறைக்கு அன்று அதிகாலை 1.55 மணிக்குத் தகவல் கிடைத்தது. புதன்கிழமை அதிகாலை அறிக்கை மூலம் காவல்துறை இதனைத் தெரிவித்தது.

காரை வாடகைக்கு எடுப்பதன் தொடர்பிலான வாக்குவாதம் காரணமாக சம்பந்தப்பட்ட ஆடவரை அந்த நால்வர் சண்டையிடும் நோக்குடன் நெருங்கினர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பாராங் கத்தியை வைத்திருந்த 38 வயது ஆடவர், பாதிக்கப்பட்ட ஆடவரை மிரட்டியிருக்கிறார்.

பிறகு, அந்த 38 வயது ஆடவர் பாதிக்கப்பட்ட ஆடவரை வேறு இடத்துக்கு ஓட்டிச் சென்றார். அந்த நால்வரின் மற்றொருவரான 36 வயது ஆடவர் காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார்.

பாதிக்கப்பட்ட ஆடவரின் அந்தக் கார் உட்லண்ட்ஸ் அவென்யூ 7 - அவென்யூ 10 சந்திப்பில் விளக்குக் கம்பத்தின்மீது மோதியது. 36 வயது ஆடவர் அங்கிருந்து தப்பியோடினார். பாராங் கத்தியை வைத்திருந்த 38 வயது ஆடவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.

மேல் விசாரணைக்குப் பிறகு அந்த 36 வயது ஆடவருடன் இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர். அப்பெண்களில் ஒருவருக்கு வயது 30, மற்றொருவருக்கு 38 வயது.

கைது செய்யப்பட்ட 38 வயது ஆடவர்மீது ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகவும் தடை செய்யப்பட்ட ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் புதன்கிழமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.

மற்ற மூவர் தொடர்பான விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஆயுதம்கைதுபறிமுதல்ஆள்கடத்தல்