இம்மாதம் 1ஆம் தேதி வியாழக்கிழமை ஒரே நாளில் கிட்டத்தட்ட 250,000 பேர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக சிங்கப்பூரிலிருந்து கிளம்பிச் சென்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர்-மலேசியா எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இதுதான்.
விசாக நாள் விடுமுறையால் நீண்ட வாரயிறுதியும் ஜூன் மாத பள்ளி விடுமுறையும் சேர்ந்து வந்ததே இதற்குக் காரணம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் குறிப்பிட்டது.
அவ்விரு நிலவழி சோதனைச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்-மலேசியா இடையே அவ்விரு சோதனைச்சாவடிகள் வழியாகவும் கார் அல்லது பேருந்து வழியாகப் பயணம் செய்ய விரும்புவோர் குடிநுழைவு அனுமதிக்காகக் கூடுதல் நேரம் காத்திருக்க நேரிடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளும்படி ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், வாகனமோட்டிகள் ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கம் வழியாகப் போக்குவரத்து நிலைமையை அறிந்துகொள்ளுமாறும் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.