புவாங்கோக்கில் விபத்து; ஓட்டுநர் கைது

புவாங்கோக்கில் விபத்து; ஓட்டுநர் கைது

1 mins read
c54bcc09-ce33-40ae-8edd-05cc4e181c14
சம்பவம் பதிவான காணொளியில் இடம்பெறும் காட்சி. - காணொளிப் படம்: எஸ்ஜி ரோட் விஜிலான்டே / ஃபேஸ்புக்

புவாங்கோக் வட்டாரத்தில் வியாழக்கிழமை (ஜூன் 4) சாலை விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விபத்தில் சம்பந்தப்பட்ட மற்றோர் ஆடவர் சுயநினைவுடன் இருந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

ஒரு காரும் வேனும் விபத்துக்குள்ளாயின. காரின் ஓட்டுநரான 45 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். வேனின் 32 வயது ஓட்டுநர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இத்தகவல்களை வெளியிட்டன.

வியாழக்கிழமை நண்பகல்வாக்கில் அதிகாரிகளுக்கு இவ்விபத்து குறித்துத் தகவல் கிடைத்தது. புவாங்கோக் கிரீன்-புவாங்கோக் லிங்க் சந்திப்பில் விபத்து நிகழ்ந்தது.

அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டிக் காயம் விளைவித்ததற்காக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

விபத்தில் சிக்கிய ஒருவர் லேசான காயங்களுக்கு ஆளானது பரிசோதனைகளில் தெரியவந்தது. ஆனால், அவர் மருத்துவமனைக்குப் போக மறுத்துவிட்டார்.

சம்பவம் பதிவான காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆரஞ்சு நிற வேன் ஒன்றும் கறுப்பு காரும் விபத்துக்குள்ளானது அதில் தெரிந்தது.

சம்பவத்தில் வேன் சாய்ந்து தரையில் மோதியதும் தெரிந்தது. காரின் முன்பகுதி சேதத்துக்கு உள்ளானது.

விபத்து குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விபத்துஓட்டுநர்மருத்துவமனைகாவல்துறைசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைகாயம்கைது