புக்கிட் பாத்தோக்கில் டிசம்பர் 22ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் 79 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.
அச்சம்பவம் தொடர்பில் 61 வயது கார் ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8 நோக்கிசெல்லும் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9ல் நடந்த விபத்து குறித்து தங்களுக்கு டிசம்பர் 22ஆம் தேதி மாலை 5 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
அவ்விபத்தில் கார் ஒன்று பாதசாரிமீது மோதியதாகக் கூறப்பட்டது.
அந்தப் பாதசாரி உயிரிழந்ததைச் சம்பவ இடத்திலேயே சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
உரிய கவனமின்றி வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக கார் ஓட்டுநரைக் கைதுசெய்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.
2025ஆம் ஆண்டின் முற்பாதியில் மட்டும் கிட்டத்தட்ட 3,818 விபத்துகள் நடந்ததாகப் போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டின் முற்பாதியில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 8.9 விழுக்காடு அதிகமாகும்.

