மத்திய விரைவுச் சாலையில் (சிடிஇ) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) அதிகாலை நடந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 30 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
விபத்து நடந்தபின் வேனை அங்கேயே விட்டுவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடிய ஓட்டுநர் குறித்த விவரங்களைக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) வெளியிட்டது.
சம்பவ நாளன்று காலை 4.10 மணியளவில் விபத்து பற்றிய தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
மற்றொரு வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவான காணொளியின்படி, சிடிஇ விரைவுச்சாலையின் ஆர்ச்சர்ட் ரோட்டுக்கு இட்டுச் செல்லும் சாலைக்குள் ஒரு வேன் போக்குவரத்துக்கு எதிர் திசையில் நுழைவது தெரிந்தது.
விபத்துக்குள்ளான காரின் கேமரா விபத்தை பதிவு செய்தது. அதில் சாலைப் போக்குவரத்துக்கு எதிராக சாலையின் வலது தடத்தில் நேர் எதிரில் ஒரு கருப்பு நிற வேன் வருவதும் அதனைத் தவிர்ப்பதற்காக அந்தக் கார் ஓட்டுநர் உடனடியாக இடது பக்கம் வளைவதும் காணொளியில் பதிவாகி உள்ளது.
இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாகத் தெரிகிறது.
காவல்துறை அங்கு வந்து சேர்வதற்குள் வேன் ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார். யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
அந்த வேன் ஓட்டுநர் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்குக் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை உறுதிப்படுத்தியது.
விசாரணை தொடர்கிறது.

