கிளமெண்டி ரயில் நிலையம் அருகே இரண்டு கார்கள் விபத்தில் சிக்கின. இதன் காரணமாக 46 வயது பெண் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அப்பெண் சேர்க்கப்படும்போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார். விபத்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) பிற்பகல் நிகழ்ந்தது.
கிளமெண்டி அவென்யூ 6 மற்றும் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் சாலை சந்திப்பில் விபத்து நேர்ந்ததாகத் தங்களுக்குப் பிற்பகல் 12.40 மணிவாக்கில் தகவல் வந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் விபத்தில் சிக்கிய கார் ஒன்றில் ஓட்டுநராக இருந்தார். அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மற்றொரு காரில் இருந்த ஓட்டுநருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. 37 வயது ஆடவரான அவர் விசாரணைக்கு உதவி வருகிறார்.

