ஹெவ்லாக் ரோட்டில் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) மாலை நேர்ந்த எஸ்பிஎஸ் பேருந்து சம்பந்தப்பட்ட விபத்தில், 63 வயது பாதசாரி உயிரிழந்தார்.
காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும், 382, ஹெவ்லாக் ரோட்டில் நடந்த விபத்து குறித்து தங்களுக்கு இரவு ஏழு மணி அளவில் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தன.
பாதசாரி சுயநினைவிழந்த நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் பின்னர் அங்கு அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறியது.
பேருந்து ஓட்டுநரான 35 வயது ஆடவர் காவல்துறை விசாரணையில் உதவிவருகிறார்.
எஸ்ஜி ரோடு விஜிலாண்டேயின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், எஸ்பிஎஸ் பேருந்து எண் 123க்குப் பின்னால் சாலையில் கிடந்த ஆடவர் ஒருவரைக் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர்கள் கவனித்துக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
அவர்கள் ஆடவருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளித்ததைப் பார்க்க முடிந்தது.
மேல் விவரங்களுக்காக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளது.

