லோர்னி சாலையில் பேருந்தும் ‘பிரம் மூவர்’ வகை லாரியும் மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த ஒருவர் காயமடைந்தார். இந்த விபத்து வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடந்தது.
தாம்சன் சாலை நோக்கிச் செல்லும் லோர்னி சாலையில் நடந்த விபத்து குறித்து அன்றைய தினம் இரவு 10.25 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
மேலும், 55 வயது பேருந்து ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகவும் அது சொன்னது.
பேருந்தில் பயணம் செய்த 54 வயது ஆடவர் காயமடைந்ததாகவும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி முற்றிலும் நொறுங்கி இருப்பதையும் முன்பக்கக் கதவு பலத்த சேதமடைந்திருப்பதையும் காண முடிகிறது.
பேருந்தின் இடதுபுறத்தில் இருந்த லாரியின் வாகனத் தடுப்பு (Guardrail) உடைந்து சாலையில் சிதறிக் கிடந்ததையும் அவற்றில் பார்க்கலாம்.
கூடுதல் விவரங்களுக்காக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.

