குடிபோதையில் தொந்தரவுகளைச் செய்து மூர்க்கத்துடன் நடந்துகொண்டதாக ஹவ்காங் அவென்யூ 5ல் வசிக்கும் ஆடவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் நாளான மே 3ஆம் தேதி நடந்த சம்பவத்தில் மற்றொருவருடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் அவர் மீது ஜூலை 4ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களின்படி சிங்கப்பூரரான 57 வயது செங் குவான் ஹெங் சம்பவத்தன்று புளோக் 328ல் உள்ள கார்ப்பேட்டை அருகே உள்ள திறந்தவெளியில் குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கத்திப் பேசி மற்றொருவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் செயல் கட்சியின் இரு கொடிக் கம்பங்கள், அக்கட்சியின் ஐந்து பதாகைகளையும் அவர் சேதப்படுத்தினார் என்று கூறப்படுகிறது. அதன் மதிப்பு மொத்தம் 200 வெள்ளி ஆகும்.
சில நிமிடங்களில் செங், தனது கையை இரு கட்சித் தொண்டர்களின் மார்புமீது கையை வைத்து பலவந்தமாகத் தள்ளிவிட்டார்.
நீதிமன்றத்தில் செங்கை வழக்கறிஞர் யாரும் பிரதிநிதிக்கவில்லை. அவர், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள விரும்புவதாக நம்பப்படுகிறது.
வேலை செய்வதற்காக இந்தோனீசியா மற்றும் வியட்னாமுக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் செங் தெரிவித்துள்ளார். ஆனால் அது பற்றிய மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
மாவட்ட நீதிபதி வோங் லி டியன், பயண அனுமதிக்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கும்படி செங்குக்கு உத்தரவிட்டார்.
அதன் பின்னர்சட்ட ஆலோசனைகளைப் பெற விரும்புவதாக செங் கூறியதும் வழக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடம் ஹவ்காங் தனித்தொகுதிக்குள் வருகிறது. அங்கு பாட்டாளிக் கட்சி வேட்பாளர் டென்னிஸ் டானுக்கு எதிராக ஆளும் மசெக சார்பில் வழக்கறிஞர் மார்ஷல் லிம் போட்டியிட்டார்.
இதில் திரு டான் தொடர்ந்து இரண்டாவது தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.