அடையாள அட்டை எண்களை (என்ஆர்ஐசி) நம்பகத்தன்மை காரணங்களுக்காகப் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்கள் அதைக் கைவிட வேண்டும் என்று தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) அறிக்கை வெளியிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் தனியார் நிறுவனங்கள் நம்பகத்தன்மை காரணங்களுக்காக என்ஆர்ஐசி எண்களைப் பயன்படுத்தக்கூடாது.
விதிமுறையை மீறும் தனியார் நிறுவனங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் (பிடிபிஏ) கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தனியார் நிறுவனங்கள் என்ஆர்ஐசி எண்களைப் பயன்படுத்தும்போது தனிநபர் தகவல்களைக் காக்க போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறுவது பிடிபிஏ சட்டத்தை மீறுவதாகும்.
“2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும்,” என்று ஆணையம் தெரிவித்தது.
என்ஆர்ஐசி எண்கள் பயன்பாடு உள்ளிட்ட தரவுகள் குறித்த விவரங்களை ஆணையத்தின் ஆவணங்களில் தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையமும் தனியார் நிறுவனங்கள் நம்பகத்தன்மைக்காக என்ஆர்ஐசி எண்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்தன.

