சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர எலி ஒழிப்பு நடவடிக்கைகளின் பலனாக அவை ஒளிந்திருக்கும் வளைகளின் எண்ணிக்கை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) வியாழக்கிழமை (ஜூன் 4) அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு, ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட சோதனையில் ஏறத்தாழ 37 எலி வளைகள் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து எலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, அவற்றின் நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.
இவ்வாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வாரியம் நடத்திய சோதனைகளில் எலிகள் மறைந்து வாழும் வளைகள் எதையும் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கண்டறியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எலிகளுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான செயல்பாடுகள், வர்த்தகர்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகியவை இந்த ஊக்கமளிக்கும் நிலவரத்தின் காரணம் என்று வாரியம் குறிப்பிட்டது.
தற்போதைய நிலவரம் மேம்பட்டிருந்தாலும் எலிகள் மீண்டும் வராமல் தடுப்பது, பொதுமக்களின் கூட்டுப் பொறுப்பாகும் என்று வாரியம் நினைவூட்டியது. எலிகள் நடமாட்டம் அல்லது அவை வாழும் வகையில் சுற்றுச்சூழல் அமைந்திருந்தால், அது குறித்து தகவல் அறிந்தோர்கள், ‘ஒன்சர்வீஸ்’ என்ற செயலியின் வழியாக புகார் அளிக்கும்படி வாரியம் கேட்டுக்கொண்டது.
உணவுப் பயன்பாடு உள்ள இடங்களைத் தவிர்த்து,எம்ஆர்டி ரயில் நிலையங்களிலும் எலித் தொல்லை மே மாதம் காணப்பட்டது. கிழக்கு, மேற்கு ரயில் தடத்தில், எலி அங்கும் இங்கும் ஓடித் திரிந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு தூய்மைப் பணிகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டன.
எம்ஆர்டி நிலையங்களில் எலிகள் நடமாட்டம் குறித்த விசாரணையும் நடந்துவருகிறது.
ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்கள், உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கும்படி எஸ்எம்ஆர்டி நிறுவனம் கேட்டுக்கொண்டது.

