சிங்கப்பூரில் போக்குவரத்துத் துறை சார்ந்த வேலைகள் வேகமாக மாறி வருகிறது. தற்போது ஓட்டுநர் இல்லாத வாகனங்களும் சாலைகளில் சேவையாற்றத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், தனியார் வாடகைக் கார், டாக்சி ஓட்டுநர்கள் தொடர்ந்து போட்டித்திறனுடன் விளங்குவதற்குப் புதிய உதவிகள் வரவுள்ளன.
இதுகுறித்து போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார்.
ஓட்டுநர்களுக்கான ஆதரவுத் திட்டம் மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார். நீண்ட காலத் தொழில் மாற்றத் திட்டம், குறுகிய காலப் பயிற்சித் திட்டம், தொழில் வழிகாட்டுதல் முயற்சிகள் ஆகியவை அவை.
இதன்மூலம் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப ஓட்டுநர்கள் தங்களை முன்கூட்டியே தயார்ப்படுத்திக் கொள்ளமுடியும். மேலும் புதிய வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான திறன்களை ஓட்டுநர்கள் பெறலாம்.
செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில் சிங்கப்பூரர்களுக்குத் தேவையான திறன்களை வழங்குவதற்கும், ஊழியர்கள் புதிய சூழலுக்கு மாறுவதற்கும், வேலை மாற்றங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அரசாங்கம் முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று திருவாட்டி சுன் சொன்னார்.
“தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கிய நோக்கமே அது மக்களுக்குப் பலன் அளிப்பதற்காகத்தான். தொழில்நுட்பம் கண்மூடித்தனமாக நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது,” என்று துணை அமைச்சர் சுன் குறிப்பிட்டார்.
தானியக்கத் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், தற்போதுள்ள வேலைகள், தொழில்கள் பாதிப்படையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குடியிருப்பாளர்கள், பயணிகள், ஓட்டுநர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேகத்திலேயே தொழில்நுட்பங்களையும் செயற்கை நுண்ணறிவையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்றும் திருவாட்டி சுன் உறுதியளித்தார்.
புதிய திட்டத்தின்படி ஓட்டுநர்கள், பொதுப் போக்குவரத்து நிபுணர்களுக்கான புதிய திட்டத்தில் பங்கேற்கலாம். இது அவர்கள் பேருந்து ஓட்டுநர்களாக மாறுவதற்கு வழிகாட்டும்.

