வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் உதவி: பிரதமர்

வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் உதவி: பிரதமர்

2 mins read
c5fe426a-9669-412e-8285-41b11805b1a2
கோவன் நடுவத்தில் நடந்த மூத்தோருக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகளாவிய பிரச்சினையாக இருக்கும் விலைவாசி உயர்வைச் உயர்வைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதல் உதவி அளிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

அந்த உதவிகள் அனைத்தும் அவர்களின் கவலைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டவை என அல்ஜூனிட் குழுத் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 23) வருகையளித்த பிரதமர் தெரிவித்தார்.

பிரதமராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் வோங் முதன்முறையாக அக்குழுத் தொகுதிக்கு வருகைதந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“சிங்கப்பூர்வாசிகளின் மிகப் பெரிய கவலைகளில் ஒன்று விலைவாசி உயர்வு. அதை அரசாங்கம் நன்கு அறிந்ததால்தான் அவற்றைச் சமாளிக்க இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில், சிங்கப்பூரர்களுக்கு உதவும் நோக்கில் கூடுதல் திட்டங்களைச் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்,” என்றார் திரு வோங்.

மேலும், ஒவ்வொரு நாடும் விலைவாசி உயர்வால் ஏற்படும் அழுத்தங்களை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

“ஆனால், சிங்கப்பூரில் அந்த அழுத்தத்தைச் சமாளிக்க அனைவரும் ஒன்றாகப் பணியாற்றுகிறோம். சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கம் உதவ முடியும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சவால்களைச் சமாளித்து சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க பாடுபட வேண்டும்,” எனப் பிரதமர் கூறினார்.

கோவன் நடுவத்தில் நடந்த மூத்தோருக்கான நிகழ்ச்சியில் திரு வோங் பேசினார். தெம்பனிஸ், ஹொங் கா நார்த் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளுக்கு அவர் சென்றுள்ளார்.

இம்மாதம் 11ஆம் தேதி புதிய தேர்தல் தொகுதி எல்லைகள் அறிவிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சியின் தொகுதிக்கு பிரதமர் சென்றிருப்பது இது இரண்டாவது முறை. மார்ச் 16ஆம் தேதி செங்காங்கில் உள்ள ஏங்கர்வேல் பகுதியில் நடந்த இளங்குடும்பங்களுக்கான சமூக நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்