பூனை ஒன்றைக் கொலை செய்ததாகவும் தோ பாயோவில் நான்கு பூனைகளைக் கத்தியால் குத்தியதாகவும் நம்பப்படும் ஆடவர்மீது புதன்கிழமை (ஜூலை 16) மற்றொரு பூனையைத் துன்புறுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 13ஆம் தேதி தோ பாயோ லோரோங் 7 புளோக் 15ல் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே உள்ள நடைபாதையில் 26 வயது ராயன் டான் யி பின் பழுப்பு நிற பூனையைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பூனை பிழைத்ததா என்பதை நீதிமன்ற ஆவணங்கள் உறுதிப்படுத்தவில்லை.
ஜூலை 16ஆம் தேதி சுமத்தப்பட்ட கூடுதல் குற்றச்சாட்டை அடுத்து சிங்கப்பூரரான டான்மீது மொத்தம் ஆறு பூனைகளைத் துன்புறுத்திய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவற்றுள் நான்கு பூனைகளை டான் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
2024 செப்டம்பர் 21ஆம் தேதி தோ பாயோ லோரோங் 5இல் உள்ள புளோக் 38இல் டான் வெள்ளை நிற பூனையைக் கத்தியால் குத்தியதில் பூனைக்கு 5 சென்டிமீட்டர் அளவிகுக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு மறுநாள் லோரோங் 5இல் உள்ள புளோக் 5, தோ பாயோ நார்த்தில் உள்ள புளோக் 200 ஆகிய பகுதிகளில் டான் மேலும் மூன்று பூனைகளைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
டான் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி பூனைகளைத் தாக்கினார் என்பதையோ தாக்கப்பட்ட பூனைகள் பிழைத்தனவா என்பதையோ நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
நீதிமன்ற பதிவுகளின்படி மார்ச் 14ஆம் தேதியிலிருந்து டானை அதிகாரிகள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். டானுக்குப் பிணையும் வழங்கப்படவில்லை. டானின் வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரணைக்கு வரும்.
விலங்குவதைக்காக மீண்டும் பிடிபடுவோருக்கு மூவாண்டுச் சிறை அல்லது $30,000 அபராதம் விதிக்கப்படலாம்.