இளையர்களின் தங்குமிடத் தேவைகளை நிறைவுசெய்யும் நோக்கில், கூடுதல் வாடகை வீட்டு வசதிகளை வழங்க அரசாங்கம் முயற்சி எடுக்கிறது.
கூட்டு வாழ்விடம், சேவைக் குடியிருப்புகள், வாடகைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகள் ஆகியவை அவற்றில் அடங்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்தார்.
சொந்த வீடு வாங்குவதே சிங்கப்பூர்ச் சமூக அமைப்பின் முக்கியத் தூணாகத் தொடர்கிறது. எனினும், சொந்த வீடு வாங்குவதற்கு முன்பாகத் தனித்து வாழவும் அதிக நீக்குப்போக்கை அனுபவிக்கவும் விரும்பும் இளையர்களுக்கு வாடகை வீடமைப்பு தேவைப்படுவதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக சிராங்கூனில் ‘எம்பெர்’ வாடகைக் குடியிருப்பைத் திறந்துவைத்துத் திரு சீ பேசினார்.
இத்தகைய புதிய அணுகுமுறை வீடமைப்புச் சந்தையை மேலும் வளப்படுத்தும் என்றும் பல்வேறு தெரிவுகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதன் ஒரு பகுதியாக, 2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட சேவைக் குடியிருப்புகள், 2026 ஜூலையில் அறிவிக்கப்பட்ட எஸ்ஜி இளையர் திட்டத்தின்கீழ் 21 முதல் 35 வயதுள்ளோருக்கு இரு தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் 100க்கும் மேற்பட்ட மானிய விலையிலான வாடகை வீடுகள் போன்ற பல்வேறு திட்டங்கள் தனியார் துறையுடன் இணைந்து ஆராயப்படுகின்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய லிம் துவா தோ சந்தை அமைந்திருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள ‘எம்பெர்’ பழைய பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கைவிடாமல், புத்தாக்கமிக்க வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தனி அறைகள், சேவைக் குடியிருப்புகள், யோகாசனம், தியானக் கூடங்கள், கூரைத் தோட்டங்கள், செல்லப் பிராணிகளுக்கான இடம், உடற்பயிற்சிக் கூடம் போன்ற பல சமூக வசதிகள் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ளன.


