சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2030ஆம் ஆண்டுக்குள் உடற்குறையுள்ள பெரியவர்களுக்காகப் புதிய இல்லம் ஒன்றை அமைக்கவிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் பதிவுசெய்த எழுத்துபூர்வ பதிலில் அமைச்சு இதனைத் தெரிவித்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, அமைச்சின் நிதியாதரவுடன் உடற்குறையுள்ள பெரியவர்களுக்கான 11 இல்லங்கள் செயல்படுகின்றன.
1,500 பேரைப் பராமரிக்கக்கூடிய அந்த இல்லங்கள் 80 விழுக்காடுவரை நிரம்பியுள்ளன. 100 பேர் இல்லங்களில் அனுமதிக்கப்படுவதற்கான காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டு உடற்குறையுள்ள பெரியவர்களுக்காகக் கிட்டத்தட்ட 300 இடங்களை அமைச்சு உருவாக்கியது.
இதற்கிடையே, உடற்குறையுள்ள பெரியவர்களுக்கான விடுதிகள் 80லிருந்து 90 விழுக்காடுவரை நிரம்பியுள்ளன என்றும் 75 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர் என்றும் அமைச்சு தெரிவித்தது.
குடும்பங்களுடன் வாழ முடியாத நிலையில் இருந்தாலும் இல்லப் பராமரிப்பு தேவைப்படாத உடற்குறையுள்ள பெரியவர்களுக்கு விடுதிகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, அமைச்சின் நிதியாதரவில் மூன்று உடற்குறையுள்ள பெரியவர்களுக்கான விடுதிகள் செயல்படுகின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 130 இடங்கள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இல்லப் பராமரிப்புக்கு ‘எனேபல்டு லிவிங்’ (Enabled Living) திட்டம் போன்ற சமூக அடிப்படையிலான ஆதரவுச் சேவைகளை அமைச்சு சோதித்துவருவதாகக் குறிப்பிட்டது.
இவ்வாண்டின் பிற்பாதியில் இல்ல ஆதரவுத் திட்டத்துக்கான சோதனைத் தொடங்கும். அத்தகைய சோதனைகள் மூலம் உடற்குறையுள்ள 250 பேர்வரை பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

