ஏஎல்எஸ், மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களை அழித்து மரணம் விளைவிக்கக்கூடிய நோயாகும்.
லூ கெரிக் நோய் (Lou Gehrig’s disease) என்றும் அழைக்கப்படும் இந்நோய், மூளை மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றில் உள்ள நரம்பு உயிரணுக்களளை அழிக்கும். அதனால் தசைகள் படிப்படியாகச் செயலிழக்கும். இது, காலப்போக்கில் மோசமடையும்.
குறிப்பிட்ட பரிசோதனை கிடையாது
ஏஎல்எஸ் நோயை அடையாளம் காண குறிப்பிட்ட ஒரு பரிசோதனை கிடையாது. இந்நோயின் ஆரம்ப கட்டத்தில் தலைதூக்கும் அறிகுறிகள் மற்ற நோய்களுக்கான அறிகுறிகளைப் போலவே இருக்கும்.
சிங்கப்பூரில் 250லிருந்து 400 பேர் ஏஎல்எஸ் நோயுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தேசிய நரம்பியல் கழகம் ஆண்டுதோறும் 30லிருந்து 50 ஏஎல்எஸ் சம்பவங்களை அடையாளம் காண்கிறது.
ஏஎல்எஸ் எவ்வளவு தூரம் எந்த அளவு மோசமடையும் என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். அதைத் தடுக்கவோ, மோசமடைவதிலிருந்து தடுக்கவோ அதைக் குணமடையச் செய்யவோ தற்போது சிகிச்சை ஏதும் இல்லை. அதனால் அந்தந்த நோயாளியிடம் ஏஎல்எஸ் எப்படி செயல்படும் என்பதைக் கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு சிரமமாக இருந்துவருகிறது.
அதனால்தான், தேசிய நரம்பியல் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணத்துவ மருத்துவர் கிரிஸ்டல் இயோ செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பெரிய அளவில் சேகரிக்கப்படும் நோயாளிகளின் தரவுகளை ஆராய்ந்து வெவ்வேறு நோயாளிகளிடம் ஏஎல்எஸ் எப்படி உருவெடுக்கிறது என்பதை ஆராய்கிறார்.
இதன் மூலம் அந்தந்த நோயாளிக்குத் தேவைப்படும் பராமரிப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்வது இலக்காகும். அந்த வகையில், நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தாரும் தேவைப்படும் அம்சங்களில் கவனம் செலுத்த முடியும்.
ரத்தப் பரிசோதனை முடிவுகள், தசை வலிமை போன்றவற்றை ஆராயும் ஏஎல்எஸ் கண்காணிப்பு மதிப்பெண்கள் உள்ளிட்ட அம்சங்கள் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஆராயப்படுகின்றன.
அதிகமானோர் பாதிப்பு
ஏஎல்எஸ் கூடுதலானோரைப் பாதித்துவருகிறது. குறிப்பாக ஆசிய கண்டத்தில் உள்ள மூப்படையும் சமூகத்துக்கு இது பொருந்தும்.
அதேவேளை, சிங்கப்பூரில் பொதுவாக ஐரோப்பாவைச் சேர்ந்த வெள்ளையர்களுடன் (Caucasian) ஒப்பிடுகையில் ஐந்திலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னரே ஏஎல்எஸ் நோய் பாதிப்பு ஏற்படுவதாக இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்ததாக யோ குறிப்பிட்டார்.
இரு ஏஎல்எஸ் நோயாளிகளிடம் பாதிப்பு ஒரே வேகத்தில் உருவெடுக்காது என்பதே தனது குழு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாக அவர் சொன்னார்.


