சிங்கப்பூரில் எம்ப்ளாய்மெண்ட் பாஸில் வேலை பெறுவதற்கான தகுதியை எட்டுவதற்கு உதவியாக 27 விதமான வேலைகளுக்கு ஊக்கப்புள்ளிகள் (போனஸ் பாய்ண்ட்) வழங்கப்பட உள்ளன.
செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகள், தாதியர், கரிம வர்த்தகர்கள் மற்றும் உயர்நிலை நிதி ஆலோசகர்கள் போன்றோர் இந்தப் பட்டியலில் இடம்பெறுவர்.
ஊக்கப்புள்ளிகள் அடிப்படையிலான வேலைக் கட்டமைப்பு இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்போது எம்ப்ளாய்மண்ட் பாஸுக்கான புதிய முறையின்கீழ் பரிசீலிக்கப்படும்.
எம்ப்ளாய்மண்ட் பாஸுக்குப் புதிதாக விண்ணப்பம் செய்வோருக்கான இரண்டு புதிய தகுதிவரம்புகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
COMPASS எனப்படும் இந்தப் புதிய கட்டமைப்பு பற்றி மனிதவள அமைச்சு கடந்த ஆண்டு அறிவித்தது.
இங்கு பற்றாக்குறையாக உள்ள திறன்களைப் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுடன் சிங்கப்பூரின் உத்திபூர்வ பொருளியல் முன்னுரிமைகளுக்குப் பங்களிக்கும் நிறுவனங்களும் எம்ப்ளாய்மண்ட் பாஸ் பெற உதவு வதற்கான ஊக்கப்புள்ளிகளைப் பெறும்.
பொருளியல் வாய்ப்புகளைப் பெறுவதற்குத் தேவைப்படும் வெளிநாட்டு மனிதவளத்தை இங்கு வேலைக்கமர்த்த இந்தப் புள்ளிகள் உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவிபுரியும்.
ஊக்கப்புள்ளிகளைப் பற்றிய விவரங்களம் எஸ்ஓஎல் எனப்படும் பற்றாக்குறை வேலைப் பட்டிலும் நேற்று வெளியிடப்பட்டன. சிங்கப்பூரில் பற்றாக்குறையாக உள்ள திறனாளர் வேலை பற்றிய விவரங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
எஸ்இபி எனப்படும் உத்திபூர்வ பொருளியல் முன்னுரிமைத் திட்டத்திற்கான ஊக்கப்புள்ளிகள், சிங்கப்பூரின் பொருளியல் குறிக்கோள்களுக்கு முக்கியப் பங்களிக்கக்கூடிய நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.
பற்றாக்குறை உள்ள திறனாளர்களை ஈர்க்க அவற்றுக்கும் வாய்ப்பளிக்க இவ்வாறு செய்யப்படுகிறது.
திறனாளர்கள் தேவைப்படும் 27 விதமான வேலைகளை எஸ்ஓஎல் அடையாளம் கண்டுள்ளது.
அரசாங்க அமைப்புகள், தொழிற்சங்கம் மற்றும் முதலாளிகளுடன் இணைந்து மூன்று பரிசீலனைகளின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சும் வர்த்தக தொழில் அமைச்சும் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
இந்த வேலைகளில் சேருவோருக்கு இன்னும் கணிசமான திறன்கள் தேவைப்படுகின்றன.
இவற்றுக்கு உள்ளூர் திறனாளர்களைத் தயார் செய்வதற்கான திட்டத்தை உருவாக்க தொழில்துறையினருடன் இணைந்து பொருளியல் வளர்ச்சிக் கழகம் பணியாற்ற உள்ளது.
இந்தப் பட்டியல், நீக்குப்போக்குகளை சரிசமமாக்கும் வகையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது தேவைப்பட்டால் ஆண்டுக்கு ஒரு முறையோ மறுஆய்வு செய்யப்படும்.
வேளாண்தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், பசுமைப் பொருளியல், சுகாதாரப் பராமரிப்பு, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், கடல்துறை என்னும் ஆறு தொழில்துறைகளில் உள்ள வேலைகளை இந்தப் பட்டியல் உள்ளடக்கி உள்ளது.