குடியரசின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) மதிய நேரத்தில் அவசர மருத்துவ உதவி கேட்டு அழைப்பு விடுத்த சிப்பந்தியை சிங்கப்பூர் ஆகாயப்படை (ஆர்எஸ்ஏஎஃப்) காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது.
அதன் விவரங்களை ஆகாயப்படை அதன் ஃபேஸ்புக்கில் அன்றையதினம் பதிவிட்டது. உதவிக்கான அழைப்பு கிடைத்ததும் கப்பலில் இருந்த அந்த நோயாளி உடனடியாக ‘ரெஸ்கியு10 H225M’ ரக மீட்புக்கான ஹெலிகாப்டரைக் கொண்டு ஆகாயப் படையால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த நோயாளி தற்போது மருத்துவமனையில் சீரான நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததென்று ஆகாயப் படை தெரிவித்தது.
அவர் விரைவில் உடல்நலம் தேற வேண்டும் என்று விரும்புவதாகவும் அது கூறியது. “நாள்முழுவதும் உயிர்களைக் காக்கத் தயாராக இருக்கும் எங்களது ஆகாயப் படை வீரர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் போற்றுகிறோம்,” எனவும் அதன் பதிவில் ஆர்எஸ்ஏஎஃப் குறிப்பிட்டது.


