சனிக்கிழமை (செப்டம்பர் 5) காலை நிலவரப்படி சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்தது.
சனிக்கிழமை காலை ஏழு மணி நிலவரப்படி அப்பகுதியில் பிஎஸ்ஐ குறியீடு 102ஆகப் பதிவானது. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) முதல் இதுவரை சிங்கப்பூரின் மூன்று பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற கட்டத்தை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிறகு சனிக்கிழமை காலை ஒன்பது மணி நிலவரப்படி மத்தியப் பகுதியில் பிஎஸ்ஐ குறியீடு 115ஆகப் பதிவானது. மேற்குப் பகுதியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டு பிஎஸ்ஐ குறியீடு 98ஆகப் பதிவானது.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் குறியீடு 96ஆகப் பதிவானது. வடக்கு, தெற்குப் பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து நடுத்தர நிலையில் இருந்தது. பிஎஸ்ஐ குறியீடு வடக்கில் 83ஆகவும் தெற்கில் 87ஆகவும் பதிவானது.
பிஎஸ்ஐ குறியீடு 101லிருந்து 200க்குள் பதிவானால் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக வகைப்படுத்தப்படும். அந்தச் சூழலில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு தேசியச் சுற்றுப்புற வாரியம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளும்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுவாக்கில் மேற்குப் பகுதியில் பிஎஸ்ஐ குறியீடு 101ஐத் தாண்டியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்தது.


